‘‘இந்த கதையை வைத்துக் கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன்…’’

‘போகுமிடம் வெகுதூரமில்லை’ பட விழாவில் இயக்குனர் உருக்கம்

ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசுகையில், “நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன் காலை 5 மணிக்குக் கதை சொல்ல வரச்சொன்னேன். ஆனால் மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையை விட அவர் அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத் தான் இந்தப் படம் செய்தேன்.
அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது. கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம். எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால் தான் இந்தப்படம் செய்ய முடிந்தது. இது மிக எமோஷனலான படம். 12-வது பெயிலான போது அழுதேன் அதே போல் இந்தப்படம் பார்த்த போதும் அழுகை வந்துவிட்டது.
படத்தில் கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார். ஒரு நாள் கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்த கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும் அது தான் என் நோக்கம்..” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. மைக்கேல் கதை சொன்ன போதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன். அதே போல் இந்தப்படமும் மிக எமோஷலான படமாக இருக்கும். இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். விமலுடன் நாலாவது படம் மிக அருமையாக நடித்துள்ளார். கருணாஸ் எல்லோரையும் அழ வைத்து விடுவார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பேரிய வெற்றிப்படமாக இருக்கும். விஷுவலும் பாடலும் செம்மையாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

கதை நாயகி மேரி ரிக்கெட்ஸ் பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. கருணாஸ் சார் நிறைய ஒத்துழைப்பு தந்தார். விமல் சார் நிறைய சொல்லித் தந்தார். ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

இயக்குநர் தினகரன் பேசுகையில், “மைக்கேல் எனக்கு நெருங்கிய நண்பர். 2015ல் எனக்கு அறிமுகமானவர். அப்போது இப்படத்திற்காக பைலட் பண்ணியிருந்தார் அதைப்பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. எந்த அனுபவமும் இல்லாமல் எப்படி இப்படி எடுக்க முடியும் எனப் பிரமிப்பாக இருந்தது. ஆடியன்ஸை எப்படி எங்கேஜ் பண்ணுவது என்பதை அவரது திரைக்கதையில் அத்தனை நுணுக்கமாக வைத்திருந்தார். நான் வாய்ப்பு தேடிப் போகும் இடங்களில் எல்லாம் இவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தப் படம் பலமுறை நின்று நின்று ஆரம்பித்தது. ஆனால் நம்பிக்கை குறையாமல் இருப்பார். ஜே பேபி படத்தில் நானும் மைக்கேலும் வேலை பார்த்தோம். அப்போதும் அவரை பார்த்துப் பிரமிப்பாக இருக்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். மிக முக்கியமான விசயத்தை இந்தப்படம் பேசுகிறது. இந்தப்படம் வெற்றிபெறவும் மைக்கேலுக்கும் என் வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன், விமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

கவிஞர் சினேகன் பேசுகையில், “போகுமிடம் வெகுதூரமில்லை, படத்தின் தலைப்பே மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை அழகாகச் சொல்கிறது அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் தெரியாது எனச் சொல்லிவிட்டு தமிழில் பேசிய, தமிழில் படம் தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நியூசிலாந்தில் அவர் பார்லிமெண்டில் போட்டியிட்டவர், நல்ல படங்கள் தொடர்ந்து செய்வேன் எனச் சொல்லும் அவர் மனது மிகச்சிறப்பானது. ஒரு இயக்குநருக்கான தயாரிப்பாளராக இருக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணா பல தளங்களில் தன்னை நிரூபித்துவிட்டவர், விமல் அவர்களும் இந்தப்படம் மூலம் பெரிய வெற்றியைப் பெறுவார். மிகச்சிறந்த மெலடிகள் தரும் ரகுநந்தன் இன்னும் பெரிய இடம் செல்வார். விமலுக்கும் ரகுநந்தனுக்கும் பெரிய உயரத்தை இந்தப்படம் தரும். ஒரு நேர்த்தியான படைப்பு, ஒரு ஷாட்டில் தெரிந்து விடும் டிரெய்லரிலேயே அத்தனை பிரமிப்பாகத் தெரிந்து விடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் செந்தில்நாதன் பேசுகையில், “தயாரிப்பாளர் இயக்குநரின் 15 வருடப் போராட்டம் என்றார். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தான். எனக்கும் 15 வருடப் போராட்டத்திற்கு பிறகுதான் எனக்கு பூந்தோட்ட காவல்காரன் பட வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அர்ப்பணிப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். கேமரா, மியூசிக், எடிட்டிங், ஆர்ட் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. கருணாஸ், விமல் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் தரும்..” என்றார்.

தயாரிப்பாளர் தேனப்பன் பேசுகையில், “இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன் அவர் மூலம் இந்தப்படம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காதபடி இருக்கும். அத்தனை அற்புதமான படமாக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

படத்தின் இயக்குநர் மைக்கேல் K ராஜா பேசுகையில், “இது எனது முதல் மேடை, இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன்.
தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார், நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்று விட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை, ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும் போதெல்லாம் இந்தக்கதையைக் கேட்டு செமையா இருக்கு என சிலர் சொல்லும் வார்த்தை தான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்கம் . அது போல் இந்தக்கதையைக் கேட்ட அனைவரும் ஊக்கம் தந்துள்ளார்கள். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கர சண்டை போட்டுள்ளேன் ஆனால் அவர் எடிட்டிங் தான் படமே, அதற்காக நன்றி. விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும், அவரைப்பற்றி நிறையச் சொன்னார்கள் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்கு வரச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப்படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும், அசத்தியிருக்கிறார். இந்த கதைக்களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம், தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள் அற்புதமான அனுபவமாக இருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசுகையில், “இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை. சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் விமல் பேசுகையில், “தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம் நன்றி. இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகு தான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனசுக்காரர் கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன், அவர்கள் எல்லோரும் பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள் அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப்படத்திலும் இருக்கிறது. இசையமைப்பாளர் ரகுநந்தனோடு நாலாவது படம் இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம். இது மாதிரியான படம் செய்ததில்லை மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.” என்றார்.

Comments (0)
Add Comment