நக்சல் பாரிகள் என்ற பெயரில் நிரபராதிகள் அதுவும் அப்பாவிகள் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை சொல்லி இருக்கிறார்கள். எளிய மக்களின் உயிரை தங்கள் சுயநலத்துக்காக சூறையாடி அதிகார வர்க்கம் போடும் ஆட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்த ’தண்டகாரண்யம்.’
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுவப்பட்டு என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர் தினேஷ். அவரது தம்பி கலையரசன்.
கலையரசன் வனத்துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார். உள்ளூர்ப் பெண் வின்சு அவரது உயிருக்கு உயிரான காதலி. வனத்துறையில் எதிர்பார்ப்புடன் ஏழு ஆண்டுகள் கலையரசன் வேலை பார்த்த நிலையில் வேலை நிரந்தரமாகிவிடும் சமயத்தில் அண்ணன் தினேஷால் ஒரு பிரச்சினை. எனவே வேலையை இழக்க நேரிடுகிறது.
இந்த நிலையில் ராணுவத்தில் சேரலாம் என்று ஒருவர் வழிகாட்டுகிறார். நிலத்தை விற்று சில லட்சங்கள் பணத்தைக் கட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்று ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்கிறார். அங்கே பயிற்சி என்ற பெயரில் அடித்து உதைக்கிறார்கள். அங்கே போன பிறகு தான் தன்னுடன் பயிற்சி பெறுபவர்கள் முன்னாள் நச்சல்பாரிகள் என்று தெரிய வருகிறது. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு சரணடைந்த அவர்களுக்கு மறுவாழ்வு, ராணுவப் பயிற்சி ,வேலை
வாய்ப்பு என்று ஆசை காட்டி அங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.
நச்சல் பாரிகள் என்று ஒப்புக்கொண்டால் தான் மேலே பயிற்சிக்குச் செல்லலாம் என்று ராணுவ அதிகாரிகள் சொல்ல… வேறு வழியின்றி கலையரசனும் பால சரவணன் உள்ளிட்ட அவரது நண்பர்களும் ஒப்புக்கொள்ள…
இப்போது அந்த மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிறது. வெளியே ஒரிஜினல் நக்சல் பாரிகளின் திடீர் தாக்குதல்களால் கையாலாகாத அரசு என்று பெயர் வந்து விடுமே என்று பயப்படுகிறது ஆளும் அரசு. பிரச்சினையைச் சமாளிக்க, ராணுவ பயிற்சி பெற்று வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த இளைஞர்களில் பலரை ராணுவ அதிகாரிகள் காட்டுக்குள் அழைத்துச் சென்று போலி என்கவுண்டர் செய்து பலி கொடுக்கத் திட்டமிடுகிறார்கள் .
சரணடைந்த நக்சல் பாரிகள் பற்றிய செய்தி பத்திரிகையில் வருகிறது. இதைத் தெரிந்து கொண்ட உள்ளூர் போலீஸ்காரர்கள் கலையரசன் குடும்பத்தினரை சித்ரவதை செய்கிறார்கள். ராணுவப் பிடியிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று கலையரசன் முயற்சி செய்கிறார். முடியவில்லை எனினும் மறுபடி மறுபடி முயல்கிறார்.
அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? ஊரில் உள்ள மக்களுக்கு என்ன ஆகிறது என்பது ’தண்டகாரண்யம்’ படத்தின் மீதிக்கதை.
ராணுவப் பயிற்சி மையத்தில் சக நண்பன் பால சரவணனிடம் கலையரசன் தன் முன் கதை சுருக்கம் சொல்வது போல் படத்தை தொடங்குகிறார்கள்.
பையூர் வனச்சரகத்தில் வனச்சரக அதிகாரிகள் தற்காலிக ஊழியர்களை நடத்தும் விதமும், வன பாதுகாப்பு என்கிற பெயரில் நடக்கும் கஞ்சா செடி உள்ளிட்ட வளர்ப்பு சட்ட விரோத அட்டூழியங்களும் காட்டப்படுகின்றன.வனச்சரக அதிகாரிகளின் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் வாலிபராக தினேஷ் வருகிறார். இதனால் அலுவலக ரீதியான பிரச்சினைக்குள்ளான வனச்சரகர் அருள்தாஸ், தினேஷைப் பழிவாங்க துடிக்கிறார். உள்ளூரில் வன அதிகாரிகளுக்கும் தினேஷ் மற்றும் மக்களுக்குமான மோதல் என்றால் அங்கே ராஞ்சியில் ராணுவப் பயிற்சி என்கிற பெயரில் கலையரசனும் பால சரவணனும் கொடுமையான சித்ரவதைகளை அனுபவிக்கிறார்
கள். சொல்லி முடியாத இந்த சோகத்துக்கு வந்ததா விடிவு காலம் என்பது கிளைமாக்ஸ்.
முருகன் பாத்திரத்தில் கலையரசனும் சடையன் பாத்திரத்தில் தினேஷும், கலையரசனின் காதலி பிரியாவாக வின்சுவும், தினேஷின் மனைவியாக ரித்விகாவும் நடித்துள்ளார்கள்.
முருகனாக நடித்துள்ள கலையரசன் ராணுவ பயிற்சி தளத்தில் பயிற்சி பெறும் போது அந்த கேரக்டராகவே மாறித் தெரிகிறார். ஆரம்பத்தில் வில்ல முகம் காட்டி அப்புறமாய் நண்பனாக மாறும் சபீருக்கும் இவருக்குமான நட்பு காட்சிகளின் கனத்தை கூட்டி விடுகிறது. சடையனாக வரும் தினேஷ் அந்த கேரக்டரில் நடிப்பில் மாயா ஜாலம் செய்கிறார். அவர் திமிறி எழும் காட்சிகளில் அந்த அனல் கொண்ட ஆவேசம் கவனிக்க வைக்கிறது.
கலையரசனின் காதல் ஜோடியாக வின்சு ரேச்சல் சாம் தாயின் எதிர்ப்பை மீறி காதலனை கைப்பிடிக்க துடிக்கும் காட்சிகளில் நடிப்பில் முன்னிற்கிறார். தினேஷின் மனைவியாக ரித்விகா அந்த கேரக்டரை உள்வாங்கி செய் திருக்கிறார்.
வன்மம் பொங்கி
வழியும் கண்களோடு வனச்சரக அலுவலராக வரும் அருள்தாஸ் அந்த வில்லன் பாத்திரத்தில் பளிச்.
சிறிய உஸ்தாத் ஆக வரும் யுவன் மயில்சாமி உடல் மொழியிலும் நடிப்பிலும் கம்பீரம். அமிதாப்பாக வரும் சபீரின் பாத்திரம் கலையரசனின் எதிரியாக இருந்து நண்பனாக மாறத் தொடங்கும் இடத்திலிருந்து நடிப்பில் தனித்துவம்.
பால சரவணன் தானொரு நக்சலைட் என்று சொல்லி சிரிக்க வைப்பவர், என்கவுண்டர் பயத்தில் அலறும் போது கலங்க வைக்கிறார்.
வேட்டை முத்துக்குமார், கவிதா பாரதி இருவருமே வில்லன்கள்.
ராணுவப் பயிற்சியில் நடக்கும் சித்ரவதைகள் ’டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டுகின்றன.
.பாடல்களிலும் பின்னணி இசையிலும் நேர்த்தி காட்டி இருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்
’அடியே அலங்காரி’, ’காவக்காடே’ பாடல்கள் காதலும் நெகிழ்வுமான கனி ரசங்கள்.
பிரதீப் காளிராஜாவின் கேமரா கதை மாந்தர்களோடு சங்பவங்கள் நிகழும் பின்புலத்தையும் துளியும் பிசகாமல் காட்சிப்படுத்தியுள்ளது.
பாத்திரங்களில்
யதார்த்தம், தொய்வில்லாத திரைக்கதை, பட உருவாக்கத்தில் தேர்ந்த அனுபவம் என்று காட்சிக்கு காட்சி தன்னை வெளிப்படுத்தி ஒரு நேர்த்தியான படத்தை நெஞ்சுக்கு நெருக்கமாக தந்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகார வர்க்கத்தின் வஞ்சகத்தையும் வெளிப்படுத்தும் இந்த தண்டகாரண்யம் அப்பாவி மக்களின் உயிர்களை தன் சுயநலத்துக்காக வேட்டையாடும் அதிகார வர்க்கத்தின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறது. அதற்காக ஒரு தனி சபாஷ்.
திரையில் ஒரு தீப்பிழம்பு.