காவல் நிலையத்தை மையமாக வைத்து திகிலும் திரில்லருமாய் ஒரு படம்.
கோவளம் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளரான நட்டி. சென்னை வந்த பிரதமர் பாதுகாப்பிற்காக சென்ற நிலையில், அவர் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் லேப்டாப் வழியாக மிரட்டுகிறார்.
அது உண்மை என்று நிரூபணமும் ஆகிறது. லாக்கப்பில் இருந்து நைசாக வெளியேற முயன்ற கைதி ஒருவர் வாசலை தாண்ட முற்படும்போது குண்டு வெடித்து சிதறிப் போகிறார்
தற்போது இந்த போலீஸ் நிலையத்துக்குள் தன் மகனை காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் அக்ஷரா ரெட்டி உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஆகியோர் சிக்கிக் கொள்கிறார்கள்.
பிரதமர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற சம்பவம் வெளியே தெரிய வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிதாகும். அதனால் இந்த பிரச்சினையை அடக்கி வாசிக்க உத்தரவிடுகிறார் கமிஷனர்.
இந்த நிலையில் மர்ம நபரின் கட்டுப்பாட்டில் இருந்து காவல் நிலையம் மீட்கப்பட்டதா?
அந்த மர்ம மனிதர் பிடிபட்டாரா, இதில் அவரது நோக்கம் என்ன? என்பதை ஒரு இளம் பெண்ணின் கொலை பின்னணியில் தந்திருக்கிறார்கள்.
காவல்துறை ஆய்வாளராக வரும் நட்டி தான் கதையின் நாயகன். அவருடைய கதாபாத்திரமும் அதற்கான நடிப்பும் சிறப்பு. கிளைமாக்சில் தனது நடிப்பால் மனசை கலங்கடித்து விடுகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அருண் பாண்டியன், தனது நடிப்பு சிறப்பால் அந்த கேரக்டரை தாங்கி பிடிக்கிறார். மகனை காணவில்லை என்ற தனது புகாரை அலட்சியமாக கையாளும் போலீசாரிடம் ஒரு கட்டத்தில் இவர் எகிறிப் பாயும் இடத்தில் சினம் கொண்ட புலியின் சீற்றம் இவர் நடிப்பில்.
காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் அக்ஷரா ரெட்டி தனது கேரக்டரின் கனமறிந்து அதை மிகை நடிப்பின்றி சிறப்பாக செய்திருக்கிறார்.
காவலராக நடித்திருக்கும் மூணாறு ரவி வெடிகுண்டு நாற்காலியில் அமர்ந்தபடி உயிர் பயத்தை கண்களிலே காட்டும் இடங்கள் அற்புதம். அவருக்குள் இருந்த சிறந்த நடிகனை வெளிக்கொண்டு வந்திருக்கிறது, இந்த கேரக்டர்.
நீதிபதியாக வினோதினி, இளம் காதல் ஜோடியாக ஆதித்யா சிவகுமார்-யுவினா, கைதியாக தங்கதுரை, முன்னாள் போலீஸ் அதிகாரியாக முத்துராமன் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
குணா பாலசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் அருமை.பின்னணி இசை இந்த திரில்லர் கதையை மேலும் கனமாக்கி விடுகிறது.
ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷுன் கேமரா பதட்டம் நிறைந்த போலீஸ் நிலையத்தை கண் முன் நிறுத்துகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் சுப்பிரமணியன் ரமேஷ்குமார். காவல் நிலையத்தில் நிகழும் ஒரு விபரீத சம்பவ பின்னணியில் இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்தது யார் என்பது தெரிய வரும் இடத்தில் உள்ளேன் ஐயா என்கிறார்.
Wrong எதுவும் இல்லாத right.