படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது – இயக்குநர் சீனு ராமசாமி,

‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்

‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடந்தது.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து பேசியதாவது, “15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை எட்டு முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது” என்றார்.

தயாரிப்பாளர் மேத்யூ, ” படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றால் படம் பார்க்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் ஐந்து, பத்து நிமிடங்கள் தங்களுடன் கனெக்ட் செய்து கொள்ளும்படியான மொமெண்ட் நிச்சயம் இருக்கும். முதல் பாதி முழுவதுமே எனக்கு அப்படித்தான் இருந்தது. எல்லாருமே கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி, ” இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷன்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது. படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் ‘ஜோ’. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன். ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்” என்றார்.

நடிகை மாளவிகா, “நான் ஒரே மலையாளி. இந்தப் படத்தில் என்னை நம்பி மிக முக்கியமான வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஹரி இவர்களுக்கு நன்றி. படத்தின் கதை மிகவும் பிடித்து செய்தேன். ரியோ சீனியராக இருந்தாலும் எங்களை மிகவும் நன்றாக நடத்தினார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை பவ்யா, “தயாரிப்பாளர், இயக்குநர், ரியோ என எல்லாருக்குமே நன்றி. நாங்கள் அனைவரும் முழு மனதை கொடுத்து தான் இந்த படத்தில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லாருமே இப்போது எனக்கு பெஸ்ட் நண்பர்கள். இந்தப் படத்தில் எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஷன், எமோஷன், லவ் என எல்லாமே இருக்கும். ஒரு உண்மையான காதலை உணர வேண்டும் என்றால் கண்டிப்பாக ‘ஜோ’ படத்தை நீங்கள் பாருங்கள்”.என்றார்.

இயக்குநர் ஹரிஹரன், ” இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. 2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Comments (0)
Add Comment