பூங்காவில் நடைபெற்ற பூங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா

அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பூங்கா’.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.தனசேகர் இயக்கும் இப்படத்தில் நாயகனாக கெளசிக் நடிக்கிறார். நாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நொயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோரும்
இருக்கிறார்கள்.
நான்கு இளைஞர்கள் பிரச்சனைகளோடு ஒரு பூங்காவிற்கு வருகிறார்கள், அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பது தான் ‘பூங்கா’ திரைப்படத்தின் கதை.
ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அகமது விக்கி இசையமைத்துள்ளார். முகன் வேல் படத்தொகுப்பு செய்ய, குணசேகர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். எஸ்.ஆர்.ஹரி முருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சுரேஷ் சித் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பி.ஆர்.ஓ.வாக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
பூங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த ‘லவ் டுடே’ பட இயக்குநர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
மேலும், படத்தின் தலைப்புக்கு ஏற்ப பரணி ஸ்டுடியோவில் உள்ள பூங்காவில் வைத்து ‘பூங்கா’ திரைப்படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்
விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலசேகரன் பேசுகையில், “பூங்கா படத்தின் இயக்குனர் கே.பி.தனசேகர், நா.முத்துக்குமாரிடம் இரண்டு பாடல்களை இந்த படத்திற்காக வாங்கினார். ஆனால், இடையில் முதல்.படமாக குருமூர்த்தி என்ற படத்தை இயக்கி விட்டு, இரண்டாவது படமாக இயக்கும் பூங்கா படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி உள்ளார். இன்று அந்த பாடல்கள் வெளியாகிறது. சினிமாவில் மட்டுமே இப்படியான சில அற்புதங்கள் நடக்கும். சினிமாவை நேசிப்பவர்கள் மறைந்தாலும், வாழ்ந்து கொண்டிருப்பார்கள்”, என்றார்
இயக்குனர் கேபி தனசேகர் பேசுகையில்,
“பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த வகையில் பூங்கா மண் மீது உள்ள சொர்க்கம்” என்றார்.