தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு சென்று ஆவன செய்வதாக உறுதி கூறிய அமைச்சர் சாமிநாதன் ..!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய விழாவை சிறப்பாக திரு ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார்.
சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்க தொடர்ந்து சங்கத் தலைவி கவிதா தலைவர் உரையாற்றினார்.
சங்கத் தலைவர் கவிதா பேசுகையில், “சங்க செயல்பாடுகள் குறித்தும், மேலும் திரைப்பட பத்திரிகையாளர்கள் நலனுக்காக செய்தித்துறை தரப்பிலும் செயல்திட்டங்கள் உருவாக்க வேண்டும்” என்று சங்கத்தின் நலனுக்காக வேண்டுகோளை அமைச்சரிடம் முன்வைத்தார்.
மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டார் . மேலும் மலர் வெளியிட்டில் தங்களது பங்கை அளித்த சங்க உறுப்பினர்களுக்கும், விளம்பரங்கள் உதவியில் பங்கு கொண்ட உறுப்பினர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.
விழாவில் மலரை வெளியிட்டு மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் பேசுகையில்,
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளும் செய்தியாளர்களுக்கான நலனில் தேவைப்படும் செயல் திட்டங்களும் கூடிய விரைவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனை படி விரைவில் நிறைவேற்ற ஆவன செய்வோம். என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி.’ என்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பாக துவக்கத்தில் ராக்கிங் லேடிஸ் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. மூத்த உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களும் மரியாதையும் செய்யப்பட்டது. மேலும் மக்கள் தொடர்பாளர்கள் நல சங்க முன்னாள் தலைவர் திரு டைமண்ட் பாபு அவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விழாவில் நிறைவாக சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.