கள்வன் திரை விமர்சனம்

காட்டையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்ன திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார். கண்டதும் காதல். இவானாவோ, ஒரு திருடன் என்னைக் காதலிப்பதா? என்று ஜி.வி.பிரகாஷின் காதலை நொறுக்கிப்போட…

இவானாவை அடைந்தே தீர வேண்டும் என்றநோக்கில் திருட்டை விட முடிவு செய்பவர், அந்த நேரத்தில் ஆதரவற்றிருக்கும் முதியவர் பாரதிராஜாவைத் தத்தெடுக்கிறார்.அவரைத் தத்தெடுக்க என்ன காரணம்? காதல் நிறைவேறியதா? விடை தருகிறது, கிளைமாக்ஸ்.

வனவிலங்கு தாக்கி இறந்தால்அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற, நாயகன் போடும் திட்டம் தான் படத்தின் ஒன்லைன்.
திருடன்,குடிகாரன்,பொறுப்பற்றவன் ஆகிய பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.அந்த கொங்குத் தமிழ் அவரிடம் இன்னும் அழகாக மெருகேறுகிறது.

நாயகி இவானா கோபம், வேகம், காதல் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி நாயகி அந்தஸ்தில் நிலைக்கிறார்.
முதியவராக நடித்திருக்கும் பாரதிராஜாவின் வேடமும் அதற்கான அவருடைய நடிப்பும் ஆசம். ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா, சிரிக்க வைக்கிறார், சில காட்சிகளில்.

வனப்பகுதி, அதையொட்டியுள்ள கிராமம்,யானைகள் நடமாட்டம் என இயற்கை சூழ்ந்த வெளியை கதைக்களமாக்கி அதற்கேற்ற கதை பண்ணிய இயக்குனர் பி.வி.சங்கர் பிற்பகுதியில் நொண்டியடிக்கும் திரைக்கதையை சரி செய்திருந்தால், இந்த கள்வன் உள்ளம் கவர் கள்வனாகி இருப்பான்.