சட்டமும் நீதியும் -வெப் சீரிஸ் விமர்சனம்

நீதிமன்ற வளாகத்தில் குப்புசாமி என்ற பெரியவர் தீக்குளித்து இறக்க, மற்ற எல்லோரையும் போல வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியால் அந்த சம்பவத்தை கடந்து போக முடியவில்லை.

பெரியவர் இறந்த பின்னணியில் காணாமல் போன அவரது மகள் வெண்ணிலா இருக்கிறாள். மகளை கடத்திப் போய் விட்டார்கள் என்று போலீஸ் நிலையம் சென்று குப்புசாமி முறையிட, அவர்களோ புகாரை ஏற்க மறுத்ததோடு அவரையும் அடிக்காத குறையாக துரத்தி விடுகிறார்கள்.

இதனால் மனம் நொந்து போகும் குப்புசாமி, கோர்ட் வளாகத்தில் அந்த விபரீத முடிவை எடுக்கிறார்.
தீக்குளித்து இறந்து போன குப்புசாமிக்கு நீதியை தேடித் தரவேண்டும் என முடிவு செய்யும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, காணாமல் போன குப்புசாமி மகள் வெண்ணிலாவை மீட்டுத் தரக்கோரி ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கிறார்.

வெண்ணிலா கடத்தப்பட்ட பின்னணியில் அந்த ஏரியா கவுன்சிலரின் மகனும் அவனது நண்பர்களும் இருப்பதால், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியையும் அவரது பெண் உதவியாளரையும் தொலைபேசி வழியே சிலர் மிரட்டுகிறார்கள்.

இந்த வழக்கில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இறந்து போன குப்புசாமியின் மகள் கடத்தப்படவும் இல்லை என்று சாதிக்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர். தீக்குளித்து இறந்த குப்புசாமி மன நலம் சரியில்லாதவராக 20 ஆண்டுகள் மனநல காப்பகத்தில் இருந்தவர். சிறு வயதில் காணாமல் போன அவரது மகள் வெண்ணிலாவை காவல்துறை அவளது தாயாரிடம் அப்போதே ஒப்படைத்து விட்டதை மறந்து இத்தனை வருடம் கழித்து புகார் கொடுக்க போயிருக்கிறார் ஆகவே அவர் தெளிவான மனநிலையில் இல்லை. இப்படி கோர்ட்டில் ஆதாரம் தாக்கல் செய்கிறார்கள்.

இந்த வழக்கில் வெண்ணிலா கடத்தப்பட்டதை நிரூபிக்க சுந்தரமூர்த்திக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காத நிலையில், படிப்படியாக அதற்கான ஆதாரங்களை கண்டு பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் வெண்ணிலாவையும் கண்டு பிடிக்கிறார். ஆனால் அவளோ கோர்ட் கூண்டில் ஏறி உண்மை சொல்லும் மன நிலையில் இல்லை.

இந்நிலையில் இந்த வழக்கு என்ன ஆயிற்று? தடைகளை தாண்டி இந்த வழக்கில் நீதி வென்றதா என்பது கிளைமாக்ஸ்.

வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக சித்தப்பு சரவணன் நடிப்பில் பெரியப்புவாக மாறியிருக்கிறார். வழக்கு தொடர்பான ஆதாரங்களை தனது உதவியாளருடன் சேர்ந்து தேடும் இடங்கள் தொடரின் எதிர்பார்ப்புக்குரிய இடங்களாகவும் நடிப்புக்கு உகந்த இடமாகவும் அமைந்து விடுகிறது.

சுந்தர மூர்த்தியின் உதவியாளராக வரும் நம்ரிதா நடிப்பே இல்லாத ஒரு நடிப்பில் அந்த கேரக்டரில் உலா வருகிறார். திரையில் இவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கு.

அரசு தரப்பு வழக்கறிஞராக ஆரோல் தாஸ், குப்புசாமியாக சண்முகம் பாத்திரங்களுக்கேற்ற தேர்வில் நடிப்பில் பளபளக்கிறார்கள். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வருபவர்கள் கூட நடிப்பில் அத்தனை தத்ரூபம்.

ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற காட்சிகளை படம் பிடித்த விதம் சிறப்பு.
விபின் பாஸ்கர் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்கி விடுகின்றன.

பாலாஜி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். 7 எபிசோடுகளிலும் எதிர்பாராத திருப்பங்கள், அதிரடி சம்பவங்கள் என இயக்கிய விதத்தில் கிளைமாக்ஸ் வரையிலும் அதே வேகத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். போலீஸ் நிலைய வாசலில் தந்தை சுந்தரமூர்த்தியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அனல் வார்த்தைகளை மகன் வீச… பதிலுக்கு , ‘உங்க அப்பா பத்தி எனக்கு தெரியும்டா’ என்று சொல்லியபடி மகன் கன்னத்தில் ஓங்கி அறை விடும் அம்மா கேரக்டர் வரை இயக்குனர் தான் தொடர் முழுக்க வியாபித்து நிற்கிறார்.