இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’

இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் நாயகனாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு லவ்வர் பாய் என பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், பிக் பாஸ் ராஜு ஜெயமோகன்,அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் சினிமா தயாரிப்பு குறித்து படித்துவிட்டு, டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்ற அர்ஜித் தற்போது நடிகராக களம் இறங்கி இருக்கிறார்.

அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த அசோக் இயக்கும் இப்படத்தை, பேஷன் ஸ்டுடியோஸ் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அர்ஜித்துக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விழாவின் தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு தனது நெருங்கிய நண்பரான அர்ஜித் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படம் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இப்படம், வரும் ஜூலை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஷங்கர் மகன் அர்ஜித் அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ தொடக்கம்: ஜேசன் சஞ்சய் நேரில் வாழ்த்து