“ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக என்னுடைய இந்த படம் குரல் எழுப்பும்”

-- தண்ட காரண்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அதியன் ஆதிரை உறுதி

லேர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்ட காரண்யம்”

இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

இந் நிகழ்வினில் நடிகை ரித்விகா பேசியது,

இந்த படத்தின் இயக்குநருடன் இது எனக்கு இரண்டாவது படம்.புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில். அதனால் மிகப் பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில் எழுதி, படத்தினை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நடிகர் கலையரசன் பேசியதாவது,

இயக்குநர் அதியன் ஒரு குழந்தை. தினேஷ்,வின்சு மற்றும் சக நடிகர்கள் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள். ரித்விகா இந்த படத்தில் எனக்கு அண்ணியாக நடித்துள்ளார்.நீலம் புரோடக்ஷன் படம் பண்ணும் பொழுது நிறைய விஷயங்கள் இருக்கும்.
தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.

 

நடிகர் தினேஷ் பேசியதாவது,

அதியன் ஆதிரை மிகவும் உணர்சிவசப்படக் கூடியவர். இருப்பினும் அவரது படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தக் கூடியவர். படத்துக்குள் இசையமைப்பாளர் ஜஸ்டின் வந்த பிறகு படம் இன்னும் பிரமாதம் ஆகிவிட்டது.
எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன். உதாரணமாக ஒருவர் மூச்சை எப்படி இழுத்து விடுவார் என யோசித்து நடித்தேன்.அதனை மக்கள் ரசித்தனர்.
லப்பர் பந்து படத்திற்கு, மக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி.காற்று, மலை, அனைத்தும் பொதுவானது.

படத்தின் இயக்குநர் அதியன் பேசியதாவது,

மகாபாரதம் பல ஆண்டு காலம் இருக்கிறது. அது தெருக் கூத்து, நாடகம் என பல வடிவில் வந்து இருக்கின்றது. இருப்பினும் அனைத்திலும் கிருஷ்ணர் ஏன் தாமதமாக வந்தார்?, அதேபோல கிருஷ்ணா சீக்கிரம் வா என திரௌபதி குரல் எழுப்புவது போல தான் இருக்கும். ஆனால் மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகில் உறியும் பொழுது சுற்றி இருக்கக்கூடிய நபர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பி இருந்தது. அதை கருப்பொருளாக வைத்துக் கொண்டு என்னுடைய இந்த படம் அமைந்திருக்கிறது. படத்தில் முதலாவதாக இயக்குநர் அமீர் நடிக்க இருந்தார் இருப்பினும் திடீரென அவர் நடிக்க முடியாததால் அந்த கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக என்னுடைய இந்தத் திரைப்படம் குரல் எழுப்பும் என நம்புகிறேன். படத்தில் பாடகர் அறிவு பாடி இருக்கிறார்.அது படத்தின்
கதைக்களத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது,

கடந்த 13 ஆண்டுகளாக குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.இந்தப் படத்தை என்னுடன் சேர்ந்து தயாரித்த தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் படப்பணியிலும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வரவில்லை.சமூகத்தைச் சரி செய்ய வேண்டும் என்கின்ற முனைப்போடு வந்திருக்கிறோம்.
நான் இயக்குநராக வரும்போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர்.முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகம் இருப்பார்கள் இருப்பினும் தற்பொழுது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
நேபாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய கலவரத்தில் கூட ராப் இசைக் கலைஞர்களுக்கு மிகப்பெரும் பங்கானது இருக்கிறது.

தொடர்ச்சியாக நீலம் ப்ரொடக்ஷனில் வேட்டுவம், பைசன் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment