உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’ கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன்-மிர்னா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது ’18 மைல்ஸ்’ மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணிரத்னம் ’18 மைல்ஸ்’ பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது
“இயக்குநர் மணி ரத்னம் சாரிடம் இருந்து கிடைத்த பாராட்டு எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக மணி சார் பாராட்டினார். கதாநாயகி மிர்னாவில் இருந்து என்னுடைய உதவியாளர் அசோக், எடிட்டர் நாஷ் என அணியில் இருந்த எல்லோரையும் தனித்தனியாக பாராட்டினார். அணியில் ஒவ்வொருவருடைய உழைப்பும் சிறப்பாக உள்ளது என்றார் எங்களுக்கு, இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நிர்வாக தயாரிப்பாளர் சிவானந்த் சாரும் எங்களை ஊக்கப்படுத்தினார்” என்றார்.
மணி ரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம், இயக்குநராக இன்னும் மேம்படுத்திக் கொள்ள தனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்றார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார். கடல் மற்றும் எல்லைகளைக் கடந்த உணர்வுகளை அழகியலோடு காட்டவுள்ளது ’18 மைல்ஸ்’.
தற்போது, இயக்குநர் மணி ரத்னத்திடம் இருந்து கிடைத்த பாராட்டு
படக் குழுவினருக்கு கூடுதல் உற்சாகம் ஆகிவிட்டது.