பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘பாட்டல் ராதா’

பா.ரஞ்சித் தயாரிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘பாட்டல் ராதா’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டைட்டிலும், போஸ்டரும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு. செய்துள்ளார்.

படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அரியணையில் குரு சோமசுந்தரம் மதுவை கையில் ஏந்திக்கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார்.

அதற்கு கீழே சிலேட்டு, கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் உபகரணம், உள்ளிட்டவை சிதறிக் கிடக்கிறது. இதன் மூலம் வேலை தெரிந்தும் வீணாய்ப்போன மதுப்பிரியரின் கதையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. படம் திரைக்கு வரும் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.