தியாகராஜன் இயக்கத்தில்,பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு உரியதானது. படமும் கல்லா கட்டியது. இதற்காக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார், பிரசாந்த்,சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டைப் பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், ‘‘அந்தகன் படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் ‘கரிஸ்மா’ தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்புத் திறனுக்கு இன்றைக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார்.
தன் மகனை மீண்டும் டாப் ஸ்டார் ஆக்குவதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம் தான் ‘அந்தகன்’.இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை வழங்கி வெற்றியை ருசித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த பிரசாந்த், இடைவெளியை உணர வைக்காமல் நன்றாக நடித்திருக்கிறார்.’ஜோடி’,’கண்ணெதிரே தோன்றினாள்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் திரையில் தோன்றிய பத்தாவது நிமிடத்திலே நம் மனதில் பதிந்த பிரசாந்த்தை இந்தப் படத்தில் காண முடிகிறது. இதற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம். இன்றளவிலும் தன்னுடைய உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே நடிகர் பிரசாந்த் தான் எனச் சொல்லலாம். தியாகராஜன்- பிரசாந்த் ஆகியோரைப் போல் திரையுலகில் அனைவரும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்த தியாகராஜன் சாருக்கு வாழ்த்துகள்’’ என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ‘‘இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம் பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.நானும், ரசிகர்களின் வரவேற்பினைக் காண்பதற்காக மூன்று முறை திரையரங்கத்திற்கு சென்றேன்.அந்தத் தருணத்திலும் யாரும் செல்போனை பார்க்கவில்லை. அனைவரும் படத்தினை சீரியசாக பார்த்தனர். 90களில் ஒரு திரைப்படத்தை திரையரங்கத்திற்குச் சென்று பார்க்கும் போது எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ, அது போன்றதொரு வரவேற்பு அந்தகன் படத்திற்குக் கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ப்ரியா ஆனந்த் பேசுகையில், ‘‘இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது மிகவும் பாசிட்டிவாக இருந்தது.படம் வெளியான பிறகும் ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்தும் ஒருமித்த விஷயமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
90ஸ் ஸ்டார் பிரசாந்த்- சிம்ரன் என்று சொல்லலாம். இப்போதும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
படப்பிடிப்புத் தளத்தில் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பவர் இயக்குநர் தியாகராஜன்.அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் காதல் கதைகளை அவர் இயக்க வேண்டும்.
அந்தகன் போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த பிரசாந்தின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி என்றார்.
நடிகை சிம்ரன் பேசுகையில்….
‘‘திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் ‘அந்தகன்’ சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்கு தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.
படப்பிடிப்புத் தளத்தில் தியாகராஜன் அமைதியாக இருப்பார். படப்பிடிப்புத் தளமும் அமைதியாக இருக்கும். பணிகள் மட்டும் சுறுசுறுப்பாக நடைபெறும்.
பிரசாந்த், என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ப்ரியா ஆனந்த் – படத்தில் அழகாகவும், ரியலிஸ்டிக்காகவும் நடித்திருந்தார்.பான் இந்திய நட்சத்திரமாக அவர் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். உண்மையில் அவர் தான் எனக்கு குரு. நான் இன்று தமிழில் இந்த அளவிற்குப் பேசுகிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம்.அவருடைய படப்பிடிப்புத் தளத்தில் ஒழுக்கமும், நேர்மையும் நிறைவாக இருக்கும். அவர் மிகவும் அன்பானவர்,உதவும் குணம் உள்ளவர். இந்தப் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய பரிசைப் போன்றது.இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், ‘‘தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம்.அதன் பிறகு அந்தத் திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிடக் கடினம். நல்ல படத்திற்குக் கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவதில்லை. பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும்.அதில் பார்க்கலாம் என்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கத்திற்குச் சென்று பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன.
இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவுக் காட்சிக்குக் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் ஒரு உண்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
படத்தில் பிரசாந்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.கண் பார்வை தெரியும். ஆனால் கண் பார்வை தெரியாதது போல் நடிக்க வேண்டும். பிறகு கண்பார்வை நிஜமாகவே தெரியாது. அது போல் நடிக்க வேண்டும். இந்த வேடத்தில் சரியான அளவுகோலில் நடிக்க வேண்டும்.கொஞ்சம் மீறினாலும் மிகை நடிப்பு வெளிப்பட்டு விடும். இந்த வேடத்தில் சிறப்பாக நடித்த பிரசாந்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும்.திரையுலகில் மீண்டும் வலம் வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிம்ரனை ‘தர்மசக்கரம்’ எனும் படத்தில் நடிக்க வைப்பதற்காக மும்பை சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன்.ஆனால் அர்ஜுன் நடித்த ‘கொண்டாட்டம்’ படத்தில் தான் அவருடன் இணைந்து பணியாற்றினேன்.ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘கொண்டாட்டம்’ தான். அந்தத் தருணத்தில் சிம்ரனுக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. நான் உடல் மொழியுடன் பிராம்ப்ட்டிங் செய்வதைப் பார்த்துக் கொண்டு நடித்து அசத்தினார்.அவர் திரையுலகத்திற்கு வருகை தந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறதாம். இன்னும் 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று தன் ஆசையைத் தெரிவித்துள்ளார்.
ஒரு எல்லைக்குப் பிறகு ஒரு கலைஞருக்கு நடிப்பு நன்றாக வரும் என்றால் சினிமா அவர்களை விடாது.நீங்கள் சினிமாவை விட்டு விலக நினைத்தாலும் சினிமா உங்களை விடாது. நாகேஷ் இறுதிக் காலகட்டம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.அவர் நடித்த கடைசிப் படம் ‘தசாவதாரம்’.அப்போது கூட அவருக்குக் கண் பார்வையில் சிறிய தடுமாற்றம் இருந்ததால் தான் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.நானும் அந்த வகையான நடிகன் தான் என நினைக்கிறேன்.
இயக்குநர் தியாகராஜனுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது. இந்தப் படம் சற்று தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றியைப் பெற்றிருக்கிறது.இதற்காகப் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ‘‘அந்தகன் படத்தை மக்களிடம் நல்ல முறையில் சென்றடையச் செய்த அனைத்து ஊடகத்தினருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படம் வெளியான பிறகு ஊடகத்திடமிருந்து வெளியான விமர்சனங்கள் மக்களைச் சென்றடைந்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது.இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்குக் கூட திறமையான கலைஞர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்தோம். திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும்,வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம்.
பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது.அவருடைய அழகு – சிரிப்பு- டயலாக் டெலிவரி- என எல்லாம் சிறப்பாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
முதலில் இந்தத் திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம்.அந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம்.அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்தப் படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார். நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன்.
அதன் பிறகே நான் இயக்கத் தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினோம்.அப்போது சிம்ரனைத் தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை.அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார்.அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ஏற்கனவே பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அவரிடம் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக் கொண்டார்.படப்பிடிப்புத் தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.
சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர். நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்தார்.அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்காரச் சொன்னேன்.எந்த தயக்கமும் இல்லாமல் அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல,எந்தப் படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்தக் கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்.அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார்.
அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லாக் காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்தக் குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்கச் செய்திருந்தார்.அவருடைய நடிப்பாற்றலால் இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.
படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இந்தத் திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும்,திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.