ஜென்ம நட்சத்திரம் – திரை விமர்சனம்

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பது நாயகன் தமனின் லட்சியம். அதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். காதல் மனைவி மால்வி மல்ஹோத்ரா தற்போது கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தனது நண்பன் இல்லத்தில் தங்க வைத்து விட்டு கதை சொல்லப் போகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கனவில் சில ஆவிகள் வந்து பயமுறுத்திப் போகிறது.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு கதையாக எம். எல் ஏ. வேல. ராமமூர்த்தியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்பட, எம்எல்ஏ. யிடம் உதவும்படி கேட்கிறார். பணம் தர மறுத்து விடும் அந்த எம் எல் ஏ.,அதோடு நில்லாமல் அவரை வார்த்தைகளால் காயப்படுத்தியும் விடுகிறார்.

இதனால் தேர்தல் செலவுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் பதுக்கி வைக்கிறார் காளி வெங்கட் .

இது தெரிந்த அரசியல்வாதியின் அடியாட்கள் காளி வெங்கட்டை வெட்டி சாய்க்கிறார்கள். தமன் வீட்டின் முன்பாக விழுந்து உயிருக்கு போராடும் காளி வெங்கட், தமன் குடும்பத்தாரிடம், கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கிய இடத்தை சொன்னவர், மொத்த பணத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரூ.40 லட்சத்தை மட்டும் மகள் ஆபரேஷனுக்கு கொடுத்து மகளின் உயிரை காப்பாற்றி விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார். அதோடு உயிரை விடுகிறார்.

பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் சகிதம் அந்த இடத்திற்கு செல்கிறார். அங்கும் மால்வி தன் கனவில் பார்த்த அதே உருவங்களை பார்க்கிறார். அதே நேரம் பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள். சிலர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

மீதி நண்பர்களையாவது தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? பணம் கிடைத்து காளி வெங்கட் மகளின் ஆபரேஷன் நடந்ததா என்பது திகிலும் திரில்லருமான கிளைமாக்ஸ்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தமன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிரடியாக சண்டையும் போடுகிறார். அந்த திகில் தொழிற்சாலையில் ஓடலும் சாடலுமாய் காட்சிகளை பரபரப் பாக்குகிறார்.

அவரது மனைவியாக வரும மால்வி மல்ஹோத்ரா ஆவி பார்த்து நடுங்கும்போது மொத்த உடம்பும் நடிக்கிறது.( அம்மணிக்கு ‘பய நாயகி ‘ பட்டம் கூட தரலாம்)

நாயகனின் நண்பராக மைத்ரேயா, அவரது காதலியாக ரக்ஷா ஷெரின் சிவம், அருண் கார்த்தி ஆகியோர் கொடுத்த கேரக்டர்களில் நிறைவு.

தலைவாசல் விஜய், காளி வெங்கட், வேல. ராமமூர்த்தி, முனீஷ்காந்த், யாசர் தங்கள் கேரக்டர் மூலம் கதை ஓட்டத்துக்கு உதவுகிறார்கள்

கேஜியின் ஒளிப்பதிவு ஆவிகள் வரும் காட்சியில் பயமுறுத்த, சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை அந்த பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

மணிவர்மன் இயக்கி இருக்கிறார். பணத்தை தேடிப் போகும் கதையில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்தது போல, பழைய தொழிற்சாலையில் பொத் பொத் என விழுகின்றன பிணங்கள். இது ஆவிகளின் கைங்கரியமா என்றால் அதுதான் இல்லை. அப்புறம் எதற்கு நாயகி கண்களில் அம்மா-பெண் ஆவி தோன்றி பயமுறுத்த வேண்டும்? நாயகி வீட்டில் பயன்படுத்திய அதே ஆவிகள் இங்கும் வரவேண்டிய அவசியம் என்ன? நாயகியை அடிக்கடி பயப்படுத்தும் அம்மா- பெண் ஆவிகளின் நோக்கம் என்ன? என்பதை அடுத்த

பாகத்திலாவது சொன்னால் நன்றாக இருக்கும்.