எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை. படம் தணிக்கை வாரியத்தில் சிக்கிக் கொண்ட நிலையில்
அந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் போனதும் அங்கு தீர்வு கிடைக்காததால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தணிக்கை வாரியத்தை அணுகியதும்
தெரிந்த கதை.
இப்போது, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு மேலும் சில திருத்தங்களைச் செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிற நிலையில்,
ஏப்ரல் 23 அன்று நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அடுத்தநாளே அதாவது ஏப்ரல் 24 அன்றே ஜனநாயகன் வெளியாகும் என்பதாக செய்திகள் புறப்பட்டன.
ஆனால் விஜய் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் முடிவு வெளியாகும் மே 4 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தான் படம் திரையிட அனுமதிக்கப்படும்.
எனவே மே 7 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இந்த தேதியிலாவது படம் வெளியாகுமா என்பது அடுத்து எழுந்திருக்கும் புதிய கேள்வி.
ஆனால் இந்தக் கேள்விக்கு விடையாக இப்போது படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனமே ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அந்நிறுவனம் இன்று காலை 11 மணியளவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தங்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கேடி தி டெவில்’ என்கிற படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகும் என்று
அறிவித்துள்ளது.
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் துருவ் சார்ஜா, இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவிருக்
கிறது.
இதனால், அதற்கு ஒருவாரம் முன்போ ஒருவாரம் பின்போ
ஜனநாயகனை இந்த படக் குழுவினர் நிச்சயம் திரைக்கு கொண்டு வர மாட்டார்கள் என்பது நிச்சயம்.
தங்களுடைய ஒரு பெரிய படம் வெளியாகி வசூல் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தங்களின் இன்னொரு பெரிய படத்தை வெளியிட்டு தங்கள் முந்தின படத்தின் வசூலை அவர்களே குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, தணிக்கை வாரியச் சான்று கிடைத்து விட்டாலும் மே 15-க்கு முன் ஜனநாயகனின் ரிலீஸ் தேதியை
படக் குழுவினர் அறிவிக்க மாட்டார்கள். ஏனெனில் ஜனநாயகனும் பணம் கொட்டும் இயந்திரம் ஆச்சே..!
