மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குநர் விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். ஆகாஷ் முரளியின் மாமனார் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். வழக்கமாக அவர் நாயகியாக நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே போகாதவர் இந்த படத்துக்கு வந்தது, டைரக்டர் விஷ்ணுவர்த்தனுக்காகத்தானாம்.. பழைய நட்பு, நன்றி மறவாத பண்பு அவரை இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.
மேலும், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ஆர்யா, இயக்குநர் இளன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் அறிமுக நாயகன் ஆகாஷ் முரளியை மேடையில் அறிமுகம் செய்து வைத்து நடிகை நயன்தாரா பேசுகையில், “’நேசிப்பாயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள். எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலத்தான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்” என்றார்.
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசுகையில், “எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கேரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா? என்று ஆகாஷிடம் கேட்டேன்.
அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸ்சை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்த்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள். விஷ்ணு வர்த்தனும் கதையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. தொழில்நுட்ப குழுவினர் சிறந்த பணி கொடுத்துள்ளனர்” என்றார்.
நடிகர் ஆகாஷ் முரளி பேசுகையில், ”நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகை அதிதி பேசுகையில், “முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள்” என்றார்.
இயக்குநர் விஷ்ணு வர்த்தன் பேசுகையில், “விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.” என்றார்.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், “முரளியுடன் நிறைய நல்ல நினைவுகள் எனக்கு உள்ளது. அவருடைய குடும்பமும் எனக்கு நல்ல பழக்கம். ஆகாஷை இந்த போஸ்டரில் பார்த்தபோது, ‘உதயா’ படத்தில் நாகர்ஜூனாவைப் பார்த்தது போல இருக்கிறது. இதற்கெல்லாம் பின்னால் ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணு வர்த்தன் இருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என்றார்.
நடிகர் அதர்வா பேசுகையில், ”என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான ‘பாணா காத்தாடி’யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோல தான், ஆகாஷூக்கும்.
நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போது தான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் எத்தனை அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.